மோசேவின் வாழ்க்கையில் இறைவனின் திட்டம் ஒவ்வொரு கட்டத்திலும் அவரை வழிநடத்தவதை நாம் பார்க்கின்றோம். எகிப்து மன்னன் யூதகுலப் பெண்களுக்குப்பிறக்கும் ஆண்குழந்தைகளைக் கொன்றுவிட உத்தரவு பிறப்பிக்கின்றான்.
மோசேவின் தாய் தனது குழந்தையை மூன்று மாதங்களாக ஒளித்து வைக்கின்றாள். அதன்பின் ஒரு கூடையில் குழந்தையைப் பொதிந்து வைத்து நைல் நதியில் மிதக்க விடுகின்றாள். அந்நதியில் குளித்துக் கொண்டிருந்த பாரவோன் மன்னனின் மகள் அக்குழந்தையை எடுத்து அரச மாளிமையில் அரச குமாரனாக வளர்க்கின்றாள். இந்நிகழ்ச்சியில் மோசேவின் தாயின் பாசத்தையும், மோசேவின் சகோதரியின் கரிசனையையும் பார்த்து நாம் அவர்களைப் பாராட்டுகின்றோம்.
இளைஞர்களில் எத்தனை பேர் தங்களது தாயின் அன்பை நினைத்து நன்றி உள்ளவர்களாக இருக்கின்றார்கள்? தங்களது உடன் பிறப்புக்களின் கரிசனை நினைத்து நன்றி உள்ளவர்களாக இருக்கின்றார்கள்?
அரச மாளிகையில் மோசே எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கின்றார். வாள்வீச்சு, குதிரை ஏற்றம், மல்யுத்தம் போன்ற கலைகளில் கை தேர்ந்தவனாகப் பயிற்சி பெறுகின்றார் இளைஞன் மோசே. ஒரு நாள் எகிப்தியன் ஒருவன் யூத குலத்தைச் சேர்ந்த ஒருவனோடு சண்டை போடுவதைப் பார்த்து மோசே கொதித்தெழுந்து யாரும் பார்க்காத நேரத்தில் எகிப்தியனைக் கொன்று மண்ணில் புதைத்து விடுகின்றார்.
சில நாட்களுக்கப் பின் இரண்டு யூத குலத்தைச் சேர்ந்தவர்கள் சண்டை போடுவதைப் பார்க்கின்றார் மோசே. சமரசம் செய்ய அவர்களிடம் சென்ற பொழுது 'எகிப்தியன் ஒருவனை நீ கொன்றது போல எங்களில் ஒருவனை நீ கொல்ல நினைக்கின்றாயோ? என்ற வார்த்தைகளைக் கேட்டதும் மோசேவுக்கு பயம் ஏற்படுகின்றது. தான் யூதகுலத்தைச் சேர்ந்தவன் என்பது அரச மாளிகையில் தெரிந்துவிடுமே என்ற அஞ்சி எகிப்து நாட்டை விட்டு ஒடி, பாலைவனத்தில் தன்னந்தனியாக வாழ்கின்றார். ஆடு மேய்த்து வயிற்றை நிரப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
கிணற்றருகே தண்ணீர் மொள்ள வந்த இளம் பெண்களுக்குத் தொந்தரவு கொடுத்தப் பயணிகளை விரட்டி விடுகின்றார். அப்பெண்கள் தங்களது வீட்டிற்கு மோசேவை அழைத்துச் சென்று ஜெத்ரோவிடம் அறிமுகப் படுத்துகின்றார்கள். மோசே அவர்களோடு தங்கி அவர்களில் ஒருத்தியைத் தனது மனைவியாக ஏற்றுக் கொள்கின்றார்.
பாலைவனத்தில் ஒரு நாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது இறைவன் எரியும் புதரில் தோன்றி மோசேவை அழைத்து இஸ்ரவேல் தங்களுக்கு விடுதலை கொண்டு வரக்கூடிய ஒரு தனிப்பெரும் தலைவனாக அழைப்பு விடுத்து அனுப்புகின்றார். ஆம், அன்பார்ந்த இளைஞர்களே, இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு நல்ல திட்டத்தை வகுத்து வைத்திருக்கின்றார்.
கொலை செய்த மோசே தான் செய்தது யாருக்கம் தெரியாது என்ற எண்ணினார். குற்றத்தை யாரும் எப்பொழுதும் மறைத்து வைக்க முடியாது. கடவுளுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
மோசே குழந்தையாக இருந்தபொழுது அவனது உயிரைக் காப்பாற்றிய எகிப்து மன்னனே அவனது உயரைத் தொலைத்துவிட எத்தனிக்கின்றான். ஆனால் கடவுள் மோசேவின் உயிரைக் காப்பாற்றுகின்றார். இளம் உள்ளங்களே! உங்கள் வாழ்விலும் இறைவன் உடனிருந்து இதுவரை உங்களைக் கருத்தாய் கண்காணித்து வருகின்றார், வந்துள்ளார் என்பதை நினைத்து நீங்கள் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
தனது குலத்தின் மீது வைத்த அன்பினால் மோசே அரச மாளிகையின் சுகபோகங்களை உதறித் தள்ளி, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு பாலைவனத்தில் கடுமையான வாழ்க்கையை ஏற்றுக் கொள்கின்றார்.
இளைஞர்களே, நீங்களும் இறைவனின் சேவைக்காகத் தியாகச் செயல்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறீர்களா? அப்படியாயின் உங்களின் எதிர்காலத்திற்கு இறைவன் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஏற்கெனவே வகுத்து வைத்திருக்கின்றார். அந்தத் திட்டம் எதுவென கண்டுபிடிப்பது உங்கள் கடமையாகும்.
இறைவன் உங்களையும் அழைக்கின்றார். உங்கள் வயதில் இருக்கும் இளைஞர்கள் திசை மாறிக் சென்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைச் சந்தித்து விண்ணரசின் மதிப்பீடுகளை அவர்கள் உள்ளங்களில் பதிக்க வைக்க வேண்டிய பணி உங்கள் கையில் உள்ளது.
மோசே யூத குலத்தின் தனிப்பெரும் தலைவனாக இறைவன் தேர்த்தது போல உங்களையும் அழைக்கின்றார். உங்கள் பதில் என்ன? இன்றே தீர்மானியுங்கள். இறைவன் உங்களோடு இருந்து வல்லமையாகச் செயல்படுவார். இறைவனின் குரலைக் கேளுங்கள். அதற்குப் பதில் கூறுங்கள். நீங்களும் பெருந்தலைவர்களாக மாறலாம்.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com